எபோலா, வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் சார்ஸ் போன்ற விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் ஜூனாட்டிக் வகை நோய்கள் (Zoonotic diseases) அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக ஐ.நா. சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் இதுபோன்ற தொற்று நோய்கள் தொடரும் எனவும் அவா்கள் எச்சரித்துள்ளனா்.
விலங்குகளின் புரதம் தொடர்பாக நிலவும் அதிக அளவு தேவை, ஏற்றுக் கொள்ள இயலாத சில விவசாய நடைமுறைகள் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்களால் கோவிட்-19 போன்ற நோய்கள் அதிகரித்துள்ளன.
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்கள் புறக்கணிக்கப்படுவதால் வருடாந்தம் 20 இலட்சம் பேர் உயிரிழக்க நேரிடுவதாகவும் ஐ.நா. சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எபோலா, வெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் சார்ஸ் போன்றவை ஜூனாட்டிக் வகை நோய்களே. இவை விலங்குகளில் தோன்றி பின்னர் மனிதர்களுக்கு பரவின.
பருவநிலை மாற்றம், தொடர்ந்து நடக்கும் நில சீரழிப்பு, இயற்கை வளங்களை அதிகளவில் பிரித்தெடுத்தல், இலாபங்களுக்காக வனவிலங்குகளை அதிகளவு வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் விலங்குகள் மற்றும் மனிதர்களின் வாழ்வு சீர்குலைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே இவ்வகையான தொற்று நோய்கள் பரவுவதற்குக் காரணமாக அமைவதாக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி கழகம் ஆகியவை இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தசாப்தங்களிலும், கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு முன்பாகவும் ஜுனாட்டிக் வகை நோய்கள் 100 பில்லியன் டொலர்கள் அளவுக்கு உலக அளவில் பொருளாதார இழப்பை ஏற்படுத்தி உள்ளதாக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநரான இங்கர் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.
நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் பல இலட்சம் மக்கள் ஓவ்வொரு ஆண்டும் இது போன்ற நோய்களால் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர் என்று அவர் மேலும் கூறினார்.
விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை பெருமளவில் தடுக்க இயற்கை வளங்களை பாதுகாப்பது மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.